தேசம்

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வயதான தம்பதியினர்: கேட்டை பூட்டச் சென்ற போது நேர்ந்த துயரம்!

காமதேனு

வீட்டின் கேட்டை பூட்டச் சென்ற வயதான தம்பதிகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (78).  வருமானவரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார். அவரின் மனைவி பானுமதி (76 ) தடய அறிவியல் துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 6 வீடுகள் கொண்ட அந்த அடுக்குமாயின் முகப்பில் உள்ள கேட்டை வயதான தம்பதிகள் இருவரும் இரவில் பூட்டிவைப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு மூர்த்தி தனது மனைவியுடன் அந்த கேட்டைப் பூட்டச் சென்றுள்ளார். அப்போது கேட் மீது கை வைத்த பானுமதி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் கணவர் மூர்த்தி அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரின் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த அசோக் நகர் போலீஸார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT