தேசம்

மூன்று வயது மகனை எரித்துக் கொல்ல முயற்சி: தாயின் செயலால் போலீஸார் அதிர்ச்சி

காமதேனு

பெற்ற தாயே மண்ணெண்ணெய் ஊற்றி தனது குழந்தையை எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ரூபிந்தர் கவுர். இவர் கணவரைப் பிரிந்து சுடானி கலான் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மூன்று வயது மகன் ஹர்மன் நேற்று முன்தினம் நள்ளிரவில் தூங்காமல் அழுது கொண்டே இருந்துள்ளார். சிறுவனின் அழுகையை நிறுத்த ரூபிந்தர் கவுர் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால்,சிறுவன் ஹர்மன் அழுகையை நிறுத்தவில்லை. இதனால் கோபம் தலைக்கேற ஹர்மன் மீது மண்ணெண்ணையை ஊற்றி ரூபிந்தர் கவுர் தீ வைத்துள்ளார்.

இதனால் குழந்தை அலறித் துடிக்கும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின் சிகிச்சைக்காக ஹர்மனை சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 50 சதவீதம் நெருப்புக்காயங்களுடன் ஹர்மன் சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஹர்மனின் தாய் ரூபிந்தர் கவுரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். கணவரைப் பிரிந்ததால் ரூபிந்தர் கவுர் மன அழுத்தத்தில் இருந்ததாக பக்கத்து வீட்டினர் போலீஸாரிடம் தெரிவித்தனர். பெற்ற மகனை தாயே தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் லூதியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT