சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 25 இடங்களில் மரக்கிளை முறிந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் வெள்ளத் தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தனர். தமிழகத்தில் கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 10 செ.மீ.க்கு மேல் மழை கொட்டித் தீர்த்தநிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையின் பெரும்பாலான இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள், 20,000 மாநகராட்சி பணியாளர்கள் எனப் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்ளச் சென்னை மாநகராட்சி தயாராகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிக்கப்பட்டுள்ளது.