மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் தேசியக்கொடி இரவிலும் பறந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் இரண்டு பேர் என மூன்று பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 25 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் குடியரசுத் தினத்தையொட்டி அப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். மாணவ, மாணவிகளுக்கு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லத்திற்கு திரும்பினர். ஆனால் ஏற்றப்பட்ட தேசியக்கொடி மாலை 6 மணிக்குள் இறக்கப்பட வேண்டும் என்ற மரபு இருந்தும் இரவாகியும் தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்படாமல் பறந்தவாறு இருந்தது. இரவில் தேசியக்கொடி பறந்ததை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தேசியக்கொடியை அவமதித்த பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பிரியதர்ஷினி, சூரியகலா ஆகிய மூவரையும் வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டடுள்ளார்.