தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து சில்லறை விற்பனை செய்ததாக நாகப்பட்டினம் அருகே திட்டச்சேரியில் மூன்று பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து திட்டச்சேரி கடைவீதி மற்றும் பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் போலீஸார் நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கட்டுக் கட்டாக வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
போலீஸாரின் விசாரணையில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட குயில், சிம்லா, ரோசா, தங்கம் என விதவிதமான லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது ஜெகபர் மகன் அசனுதின் ( 54), திட்டச்சேரி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த சின்னையன் மகன் ரமேஷ் (36), திட்டச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த முகமது நைனா மகன் பகுருதீன் (42) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.