மழை பெய்வதன் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. அந்த மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இன்று செயல்படுகின்றன.
இந்த நிலையில் பள்ளி தொடங்கிய பிறகு அதிக மழை பெய்தால் அந்த பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதேபோல அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், வேளாண் உட்பட அனைத்து துறையிலும் உள்ள மாணவ - மாணவிகளுக்கு இன்று வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வழக்கம்போல் இன்று அலுவலகம் இயங்கும் என்று பல்கலைக்கழக பதிவாளர் சீதாராமன் அறிவித்துள்ளார்.