தேசம்

பைக்கில் வைத்திருந்த 1.50 லட்சம் பணம்: வீட்டிற்கு சென்று பார்த்தபோது பதறிய விவசாயி

காமதேனு

விருதுநகர் மாவட்டத்தில் வங்கியில் விவசாயக் கடன் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயியிடம் இருந்து அவர் கடனாகப் பெற்றுவந்த 1.50 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள குன்னூர்புதூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(62) நெல் விவசாயியான இவர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் விவசாயக் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அவரது வங்கிக் கணக்கில் ஒன்றரை லட்சம் ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டு இருந்தது. இந்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் உள்ள லாக்கரில் வைத்துவிட்டு வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் தனக்குத் தெரிந்த நகைக்கடை ஒன்றுக்கு சென்று சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் வீட்டுக்குச் சென்றுபார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தின் லாக்கரில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் ரொக்கப் பணம், வங்கி பாஸ்புக், பான் கார்டு ஆகியவை திருடு போயிருந்தது. கருப்பசாமி வங்கியில் இருந்து பணம் பெற்றுச் செல்வதை நோட்டமிட்டு மர்மக் கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என்னும் சந்தேகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT