தேசம்

மணமகன் மடியில் விழுந்து உயிரைவிட்ட மணமகள்: தாலி கட்டும் நேரத்தில் நடந்த சோகம்

காமதேனு

தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மடியில் மயங்கி விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அடுத்த மதுரவாடா பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. மதுரவாடா தெலுங்கு தேசம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்து வரும் இவருக்கும், ஸ்ருஜனா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மணமகள் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான சீரகம் வைபவம் என்ற சடங்கு நடந்தது. இதன் பின்னர், தாலி கட்டும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மணமகனும், மணமகளும் அருகருகே அமர்ந்திருந்தனர். தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென்று மணமகள் ஸ்ருஜனா, மணமகன் சிவாஜி மடியில் மயங்கி விழுந்தார். இதனால் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மணமகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, மணமகள் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. எதற்காக மணமகள் விஷம் குறித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மேடையிலேயே மணமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

SCROLL FOR NEXT