தென்காசி வாலிபர் பிரதீப்
தென்காசி வாலிபர் பிரதீப்  இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்: தென்காசி வாலிபர் கைது
தேசம்

இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்: தென்காசி வாலிபர் கைது

காமதேனு

இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துைறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். அழகு கலை நிபுணரான இவரது கைபேசி எண்ணிற்கு கடந்த 21.06.2022-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். மேலும் அந்த மர்ம நபர் ஆபாச வீடியோ கால் செய்யுமாறு வற்புறுத்தி தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளார். இது குறித்து அந்த இளம்பெண் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் மனு அளித்தார்.

இளம்பெண்ணின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் க்ரைம் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பார் ராஜி மேற்பார்வையில் சைபர் க்ரைம் ஆய்வாளர் ராஜ், உதவிஆய்வாளர் ராஜதுரை தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தொழில்நுட்ப உதவியுடன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், கீழப்பாவூரை சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்தனர. அவரிடம் இருந்து ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் நான்கு சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பிரதீப் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருவதாகவும் மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் இளம்பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பி, தனது பாலியல் ஆசைக்கு இணங்கும்படியும் ஆபாச வீடியோ அனுப்பி வைக்கும்படி தொடர்ச்சியாக தொல்லைக் கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், பல இளம்பெண்கள் இவரால் மிரட்டப்பட்டனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

"சமூக வலைத்தளங்களில் அனுப்பும் மெசேஜ்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம் என்றும் இது தொடர்பாக ஆபாச மிரட்டல்கள் எதுவும் இருக்கும் பட்சத்தில் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

SCROLL FOR NEXT