வினித், கிருத்திகா தம்பதி
வினித், கிருத்திகா தம்பதி தென்காசியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம்: புதிய ஆடியோவால் பரபரப்பு
தேசம்

தென்காசியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம்: புதிய ஆடியோவால் பரபரப்பு

காமதேனு

தென்காசியில் கடத்தப்பட்ட காதல் மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது கணவன், மனைவி இருவரும் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வினித். இவர் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகளாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகாவும், வினித்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதற்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

வினித்
கிருத்திகா

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெண் வீட்டார், வினித்தை தாக்கிவிட்டு கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கிருத்திகா பெற்றோர் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். அத்துடன் கிருத்திகாவை மீட்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருத்திகா வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தார். அதில், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

கிருத்திகாவை மீட்டு தர கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வினித் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருத்திகாவை மீட்க தனிப்படை போலீஸார், குஜராத் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த மனு மீதான விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில், கிருத்திகாவின் பெற்றோர்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமீன் கொடுப்பதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத்னால் வழக்கு விசாரணையை வருகின்ற செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், கிருத்திகாவும் - வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது போன்ற ஒரு ஆடியோ அவரது வழக்கறிஞர் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் கிருத்திகா பேசும்போது, " நான் எந்த ஒரு மிரட்டலுக்கும் ஆளாகவில்லை. எனது வாழ்க்கையும் உனது வாழ்க்கையும் கருத்தில் கொண்டு தான் இது போன்ற முடிவை நான் எடுத்துள்ளேன். எனவே, நீ கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்" என்று பேசியுள்ளார்." நீ சொல்ல வேண்டிய விஷயத்தை நேரடியாக வந்து சொல், வழக்கை வாபஸ் பெறுகிறேன்" என்று வினித் அதற்கு பதிலளிப்பதும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT