தேசம்

பார் ஊழியரை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த கும்பல்: கோவையில் நடந்த பயங்கரம்

காமதேனு

கோவை சிறுமுகையில் டாஸ்மாக் பார் ஊழியர் இன்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், கண்டானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளையப்பன்(28) இவர் கோயம்புத்தூர், சிறுமுகை அருகில் உள்ள வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் காசாளராக வேலை செய்துவந்தார். இன்று காலையில் வழக்கம் போல் தான் வேலைசெய்யும் பாருக்கு வந்த காளையப்பன் பணியைத் தொடங்கினார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுபேர் கொண்ட கும்பல் காளையப்பனை சரமாரியாகத் தாக்கியது.

தொடர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் காளையப்பனை வெட்டியும் கொலை செய்தனர். சிறுமுகை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காளையப்பனின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காளையப்பன் சிறுமுகை பகுதிக்கு வேலைக்கு வந்தே ஆறுமாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் அவருக்கு இங்கு யாருடனாவது முன்பகை ஏற்பட்டதா? அல்லது சொந்த ஊரில் ஏற்பட்ட பகை இங்குவரை துரத்தி வந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT