தேசம்

குளிக்கச் சென்ற மகன் திரும்பி வரவில்லை; கதவை திறந்த பெற்றோர் கதறல்: கேம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்

காமதேனு

செல்போனில் கேம் விளையாடிய மகனைத் தந்தை கண்டித்ததையடுத்து, மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார்(47).  இவர் அப்பகுதியில் டெய்லர் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் குமார் (16) என்பவர் தாம்பரத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். விக்னேஷ் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றும் காலையில் பள்ளிக்குப் போகாமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். இதனைக் கண்ட அவரின் தந்தை செந்தில் குமார் அவரை கடுமையாகக் கண்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த விக்னேஷ் சிறிது நேரம் கழித்துக் குளிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராத காரணத்தால் சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் கதவை உடைத்துப் பார்த்தனர்.

அப்போது இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் விக்னேஷ் இருந்துள்ளார். இதைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக மகனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு விக்னேஷின் உடலைப்  பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பல்லாவரம் போலீஸார் விக்னேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT