தேசம்

வடமாநில மாணவர்களுக்குள் மோதல்: ரத்தக்களறியான சென்னை தேசிய நெடுஞ்சாலை

காமதேனு

எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மோதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சென்னை, பொத்தேரியில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் எஸ்ஆர்எம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மாலை, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மாணவர்களுக்குள் நடைபெற்ற அடிதடியில் இருதரப்பினரின் ஆதரவு மாணவர்களும் அங்கு குவிந்தனர். அப்போது கற்களை வீசி நடைபெற்ற தாக்குதலில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக மறைமலைநகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் தொடர்பாக அடிக்கடி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது நடந்த மோதலின் வீடியோவும் வைரலாகி வருகிறது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT