இலங்கையில் இருந்து வந்த 6 பேர்
இலங்கையில் இருந்து வந்த 6 பேர் 
தேசம்

நள்ளிரவில் படகு மூலம் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி தப்பி வந்த இலங்கை தமிழர் குடும்பம்: கப்பலில் சென்று மீட்ட கடற்படை

காமதேனு

இலங்கை கிளிநொச்சியில் இருந்து மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடி வந்தனர். இவர்களிடம் மண்டபம் கடலோர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பலரும் அகதிகளாக வருகின்றனர். தனுஷ்கோடி வழியாக வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இந்நிலையில், தனுஷ்கோடி கடல் பகுதியில் கடற்படை வீரர்கள் இன்று அதிகாலை ஹோவர்கிராப்ட் படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் சிலர் நின்று கொண்டிருப்பதை அறிந்தனர். இதையடுத்து, கடற்படை வீரர்கள் அங்கு சென்று விசாரித்ததில், அவர்கள் இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நியூட்டன் நிமாலராஜன்(47) மற்றும் உதயகுமார்(49), அவரது மனைவி ரோஜா(38), மகன்கள் தனுஷன்(10), கிருஷ்ணா(7) மற்றும் மகள் விதுஷா(12) என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் நேற்று இரவு படகு மூலம் இலங்கையில் இருந்து கிளம்பி உள்ளனர். இவர்களை அழைத்து வந்தவர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் 6 பேரையும் கடற்படை வீரர்கள் ஹோவர்கிராப்ட் கப்பலில் கரைக்கு அழைத்து வந்து தனுஷ்கோடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுவர்களைத் தவிர ஏனைய மூன்று பேரிடமும் மண்டபம் கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் இவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT