தேசம்

வெளியே சொன்னால் விஷம் வைத்துக் கொல்வேன்: பெற்ற மகளை மிரட்டி ஒரு வருடமாக பாலியல் தொல்லை செய்த கொடூர தந்தை கைது

காமதேனு

பெற்ற மகளுக்கு கடந்த ஓராண்டு காலமாக பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள புங்கவர்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. தச்சுத் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள். இருவருமே ஒரேவீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் இரண்டாவது மனைவியுடன் தன் வீட்டில் ரவி வசித்து வந்தார். இந்தத் தம்பதியின் மூத்த மகளுக்கு 15 வயது ஆகிறது. அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் தச்சுத்தொழிலாளி ரவி, தன் மகளுக்கு கடந்த ஓராண்டாகவே பாலியல் தொல்லைக் கொடுத்துவந்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். இந்நிலையில் நேற்று தன் மகளுக்கு, கணவர் ரவி பாலியல் தொல்லைக் கொடுப்பதை சிறுமியின் தாயார் நேரில் பார்த்துவிட்டார். இதில் அதிர்ச்சியடைந்தவரிடம் அவரது மகள் தனக்கு ஓராண்டாகவே நடந்துவரும் கொடுமைகளைச் சொல்லி அழுதார்.

இதுகுறித்து சிறுமி, அவரது தாயாருடன் சென்று கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

SCROLL FOR NEXT