தேசம்

சாலையில் திடீரென பற்றி எரிந்த பள்ளி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவிகள்!

காமதேனு

அரக்கோணம் அருகே இன்று காலை பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததில், 10 மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியின் பேருந்து இன்று காலை பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிக் கொண்டு வரும் போது, அரக்கோணம் அருகே காஞ்சிபுரம்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள சேந்தமங்கலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதைக் கண்ட பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். இதைத் தொடர்ந்து பேருந்தில் பயணித்த 10 பள்ளி மாணவிகளும், நடத்துநரும் கீழே அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் பள்ளி பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் நேரில் வந்து தீயை அணைத்தனர். மேலும், நெமிலி காவல் நிலைய போலீஸார் அந்த பேருந்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்தும் தீ விபத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளை அழைத்து வந்த பள்ளிப் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT