சென்னையில் ஓடும் ரயிலில் பாட்டுப்பாடி மதப்பிரச்சாரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை செங்கல்பட்டு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் பயணம் செய்த இருவர், கிறிஸ்தவ பாடல் பாடிக்கொண்டே மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனைக் கண்ட சக பயணிகள் தொந்தரவு கொடுக்கும் வகையில் செயல்படுவதாக பாதுகாப்பு பணியில் இருந்த செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட இருவரையும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஸ்டீபன்ராஜ்(53), ஜான்ராஜ்(32) என்பது தெரியவந்தது.இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் ரயிலில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலைய ஜாமீனில் போலீஸார் விடுவித்தனர். சென்னையில் ஓடும் ரயிலில் இருவர் மதப்பிரச்சாரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.