யானைகவுனி காவல் நிலையம்
யானைகவுனி காவல் நிலையம் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் வழிப்பறி: சென்னையில் பட்டப்பகலில் பரபரப்பு
தேசம்

பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் வழிப்பறி: சென்னையில் பட்டப்பகலில் பரபரப்பு

காமதேனு

சென்னை யானைகவுனி பகுதியில் இன்று காலை பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை யானைகவுனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வழிப்பறிகள் நடப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், தனியார் பணபரிவர்த்தனை நிறுவனம் நடத்தி வரும் ஜாகீர் உசேன் என்பவரிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாகீர் உசேன் திருவல்லிக்கேணியில் இருக்கும் தனது நண்பர் அசைன் முகமதுவிடம் இருந்து ரூ.50 லட்சம் வாங்கி வந்துள்ளார். உடன் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஹாஜா முகைதீனே என்பவரையும் அழைத்து வந்துள்ளார்.

பணத்தை வாங்கிக் கொண்டு மண்ணடியில் உள்ள தனது நிறுவனத்திற்கு வந்த நிலையில் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஜாகீர் உசேன் வாகனத்தில் இடித்து கீழே தள்ளியுள்ளனர். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரது முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பியோடியுள்ளனர்.

இந்தசம்பவம் தொடர்பாக யானைகவுனி காவல் நிலையத்தில் ஜாகீர் உசேன் புகார் அளித்தார். சந்தேகத்தின் பேரில் ஜாகீர் உசேனுடன் வந்த ஹாஜா முகைதீனே போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது நண்பர்களுடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் வழிப்பறி செய்து பணத்தை எடுத்து சென்றவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். யானைகவுனி பகுதியில் அதிகளவில் வர்த்தகம் நடைபெறுவதால் திட்டமிட்டு வழிப்பறிகள் தொடர்கதையாகி வருவதாக தெரிவிக்கும் வியாபாரிகள், கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட போலீஸ் போல நடித்து 1.40 கோடி வழிப்பறி செய்ததை சுட்டிக்காட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT