தேசம்

கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: புதுக்கோட்டை கலெக்டர் உத்தரவு

காமதேனு

கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த மூன்று நாட்களாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தமிழக முழுவதும் நேற்று இரவு வெளுத்து வாங்கிய மழை புதுக்கோட்டையிலும் தொடர்ந்தது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு  நேற்று இரவு வரையிலும்  தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. நேற்று பகலில் வெளியில் சென்றவர்கள் மழையில் நனைந்த வண்ணமே செல்ல நேர்ந்தது. மணல்மேல்குடி, குடிமியான்மலை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, ஆதனாக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் உட்பட மாவட்டம் முழுவதுமே மழை பெய்தது. நேற்று இரவும் மழை தொடர்ந்ததால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காலாண்டு விடுமுறையில் இருந்த பள்ளிகள்  இன்று மீண்டும்  திறக்கப்பட இருந்த நிலையில், மழை காரணமாக இன்றும்  மாணவர்களுக்கு விடுமுறை தொடர்கிறது.

SCROLL FOR NEXT