கேரள மாநிலத்தில் மருத்துவர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்புக்கு என பவுன்சர்களை நியமிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
கேரளா நெடுக மருத்துவமனை வளாகங்களில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நோயாளி மற்றும் அவரது உறவினர்களால், மருத்துவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதும், மருத்துவமனை உடைமைகள் மற்றும் சொத்துக்கள் சேதம் அடைவதும் தொடர்ந்து வருகிறது.
அண்மையில், கொட்டரக்காரா அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் வெறித்தாக்குதலுக்கு ஆளான பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசும் மருத்துவர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பை உறுதி செய்யும் மசோதாவை கொண்டு வந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு அப்பால், தனியார் மருத்துவமனைகள் தரப்பில் காவல்துறையை எதிர்பார்த்திராது, தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய சுயமாக முன்வந்துள்ளனர். இதன்படி மருத்துவர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்புக்கு என வழக்கமான பாதுகாவலர்களுக்கு அப்பால், பவுன்சர்களையும் பணியில் அமர்த்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பவுன்சர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு சூழல் மாறியுள்ளது.
இந்த பவுன்சர்கள், மருத்துவனைக்கு வருகை தரும் அனைவரையும், பார்வையால் ஸ்கேன் செய்வதோடு, சந்தேக நபர்களை துழாவி சோதனையிடவும் செய்கின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்களுடை பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வதற்காக, ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளன. இந்த ஏற்பாடுகளால் சில இடங்களில், மருத்துவர் மற்றும் நோயாளி, நோயாளியினர் உறவினர் ஆகியோர் மத்தியில் இணக்கம் கெடவும் வாய்ப்பாகி உள்ளது.