தேசம்

‘ஆகாசவானி செய்திகள் வாசிப்பது...’ - பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி காலமானார்

காமதேனு

ஆகாசவானி செய்திகள் வாசிப்பது எனும் கம்பீர குரலால் வசீகரித்த பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசுவாமி இன்று மும்பையில் காலமானார்.

1980, 90களில் காலை 7.15 மணிக்கு ஒலிக்கும் ஆகாசவானி வானொலி செய்திகளில் ஒட்டுமொத்த தமிழர்களையும் வசீகரித்த காந்தக் குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி. இவரின் பூர்வீகம் தஞ்சாவூர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில்தான். பிஏ ஆங்கிலம் முடித்த அவர் தமிழில் நல்ல புலமையுடன் இருந்தார். திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார். அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார். இவர் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்மராவ் உள்ளிட்டோரை பேட்டி எடுத்துள்ளார்.

1962ல் இவர் அகில இந்திய வானொலியில் பணியில் சேர்ந்த சரோஜ் நாராயணசுவாமி, சுமார் 35 ஆண்டுகாலம் தமிழ் செய்தி வாசிப்பாளராக பணியில் இருந்தார். ஒலிபரப்புத்துறையில் அவர் பணியாற்றியதை பாராட்டி இவருக்கு 2008ல் தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்த இவர் இன்று காலமானார், அவருக்கு வயது 87.

SCROLL FOR NEXT