தேசம்

ஒரு பைக்கில் 4 பேர் பயணம்... மின்னல் வேகத்தில் மோதிய கார்: பறிபோன மகன், போலீஸ்காரரின் உயிர்

காமதேனு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் போலீஸ்காரர், தன் மகனுடன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மார்சல்(38) இவர் காடல்குடி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றினார். இவர் தனது மனைவி தேவிகா(30), மகன்கள் ரஷ்வந்த்(6), ரிஷாந்த்(4), மகள் ரென்னிஷா(2) ஆகியோரை அழைத்துக்கொண்டு தன் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு துணி எடுக்கச் சென்றார். துணி எடுத்துவிட்டு தன் மனைவியின் ஊரான தெற்கு திட்டக்குளம் நோக்கிச் சென்றார். எட்டயபுரம் தொழிற்பேட்டை தாண்டிச் செல்லும்போது, எதிரேவந்த கார் ராஜா மார்சலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிறுமி ரென்னிஷாவைத் தவிர மற்ற நான்குபேரும் தூக்கிவீசப்பட்டனர். அருகிலிருந்தவர்கள் மீட்டு நான்குபேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நான்கு வயது சிறுவன் ரிஷாந்த் உயிர் இழந்தான்.

மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜா மார்சல் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கோவில்பட்டி கிழக்கு போலீஸார், காரை ஓட்டிவந்த சிவராமச்சந்திரனை(24) கைது செய்தனர்.

SCROLL FOR NEXT