திருட்டு வழக்கில் கைதானவரின் உயிரை காவல்துறையினர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சௌந்திர பாண்டியபுரத்தை சேர்ந்தவர் பாலரிச்சர்டு(39). கான்ட்ராக்டரான இவர், கும்பிளம்பாடு அருகே ஜெமி ஹவுசிங் நகரில் வீடு கட்டி வருகிறார். மேற்படி இடத்தில் உள்ள கட்டுமான பொருட்கள் Adjustable jocky 6, Spaner 28 உள்ளிட்ட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ராதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம் திருட்டில் ஈடுபட்ட பணகுடியை சேர்ந்த அரவிந்த் ஆதித்தன்(27) மற்றும் வெங்கடேஷ்(27) ஆகிய இருவரை கைது செய்து திருடப்பட்ட கட்டுமான பொருட்களை மீட்டனர். இந்த வழக்கில் கைதான வெங்கடேஷ், வயிறு வலிப்பதாக போலீஸாரிடம் கூறியதன் பேரில் வெங்கடேஷை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்கேன் எடுத்துவருமாறு அறிவுறுத்தியதன் பேரில் மேற்படி வெங்கடேஷுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் குடல் வால்வு (Appendix) முற்றிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறியதன் பேரில் வெங்கடேஷுக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராதாபுரம் போலீஸாரின் சமயோஜித புத்தியால், வெங்கடேஷ் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவைசிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய காவல்துறையினரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் பாராட்டினார். பின்னர் வெங்கடேஷ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.