தேசம்

திருமணம் ஆகாததால் விரக்தி: உயிரை மாய்க்க முயன்ற போலீஸ்காரர்

காமதேனு

திருநெல்வேலியில் திருமணம் ஆகாத விரக்தியில் போலீஸ்காரர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

மதுரையைச் சேர்ந்தவர் தமிழ் செல்வன்(29). இவர் திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள ஆயுதப்படை போலீஸ் பட்டாலியனில் 12-வது பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தங்கியிருந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. போலீஸ்காரர் தமிழ் செல்வன் அலறும் சத்தமும் கேட்டது. உடனே போலீஸார் உள்ளே புகுந்து பார்த்த போது தமிழ் செல்வன் தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனே அவரை மீட்ட போலீஸார், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தமிழ் செல்வன் சிகிச்சைப் பெற்றுவருகிறார். தமிழ் செல்வன் திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது. இருந்தும் தமிழ் செல்வனின் தற்கொலை முயற்சிக்கு வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT