விபத்து -சித்தரிப்பு படம்
விபத்து -சித்தரிப்பு படம் 
தேசம்

விபத்தில் அடிபட்டவருக்கு உதவச் சென்றவருக்கு காத்திருந்த விபரீதம்: மனைவி கண் முன்பாக சோகம்!

முருகன்.ர

திண்டுக்கல் அருகே விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவச்சென்றவர் விபத்தில் சிக்கி மனைவி கண் முன் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே குரும்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(50). இவர் குரும்பட்டி கூட்டுறவு விற்பனை சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

மகளின் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு, நேற்றிரவு சந்திரசேகர் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் கன்னியாபுரம் அருகே விபத்தில் காயமடைந்து பெண் ஒருவர் சாலை ஓரம் கிடந்தார்.

அவருக்கு உதவும் முயற்சியில், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு விபத்து சம்பவ இடத்துக்கு சந்திரசேகர் சென்றார். அப்போது அந்த வழியில் படுவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சந்திரசேகர் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்து தலையில் படுகாயமடைந்த நிலையில், மனைவி கண் முன்பாகவே சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த சாணார்பட்டி போலீஸார், சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மனமிரங்கி உதவ முயன்றவருக்கு நேர்ந்த மரணம் அப்பகுதியில் உள்ளோருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது.

SCROLL FOR NEXT