0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டு பெயர் மற்றும் நட்சத்திரம் சொல்லும் ஒரு கோடி பேருக்கு பழனி முருகன் கோயிலில் அர்ச்சனை செய்யப்படுவதாக வெளியான தகவலை கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’’0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழநி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார். அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழநி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரிவித்து பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’’ என பொய்யான தகவல் வாட்ஸ் அப் வழியாக பரப்பப்பட்டு வருவது கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு வருகிறது.
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இது போன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பக்தர்கள், பொதுமக்கள் அவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல்துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பழநி முருகன் கோயில் பெயரில் வாட்ஸ்அப் வழியாக உலவி வரும் இந்த போலி தகவல் பொதுமக்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.