தேசம்

கோயில் நிதியில் முதியோர் இல்லங்கள்: தமிழக அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

காமதேனு

உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, கோயில் நிதியைக் கொண்டு முதியோர் இல்லங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் மற்றும் எலங்கியம்மன் கோயில்களின் நிதியில் இருந்து 16.30 கோடி ரூபாயும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து 13.50 கோடி ரூபாயும், பழநி தண்டாயுதபாணி கோயிலில் இருந்து 15.20 கோடி ரூபாய் நிதியையும் பயன்படுத்தி, சென்னை, திருநெல்வேலி மற்றும் பழநியில் முதியோர் இல்லங்கள் தொடங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 12-ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்படி கோயில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது எனவும், அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும் அறங்காவலர்கள் மூலமாக பொதுமக்கள் ஆட்சேபங்களைப் பெற்ற பின்னரே முடிவெடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மூன்று கோயில்களில் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க உள்ளனர் என்பது தெரியவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பல காரணங்களால் பல கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், அவர்களுக்கு பதிலாக தக்கார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அதிகாரம் குறித்து தலைமை நீதிபதி அமர்வும், கோயில் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று முதியோர் இல்லங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், கோயில்களின் உபரி நிதியைத்தான் இப்பணிகளுக்கு பயன்படுத்துகிறோம் எனத் தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர், இதேபோல கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்தும், கோயில் நிதியில் கல்லூரி தொடங்குவதை எதிர்த்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அரசும் கோயில்களுக்கு நிதி ஒதுக்குவதாகவும், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 130 கோடி ரூபாய் சமீபத்தில் கூட நிதி ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, பழநி தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு மனு அளிக்க இரு தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT