ஒரே விமானத்தில் வந்த இரண்டு பயணிகளிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாகியுள்ள நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் தங்கள் கண்காணிப்பையும், சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று மலேசிய விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அனைத்து பயணிகளையும் தீவிரமாக சோதனை செய்தனர்.
கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் உடலில் மறைத்து கடத்தி வந்த 506 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தினை, சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 30 லட்சத்து 69 ஆயிரத்து 396 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதேபோல் அதே விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் கடத்தி வந்த 509 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தினை, திருச்சி விமான நிலைய சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 30 லட்சத்து 87 ஆயிரத்து 594 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் ஒரே விமானத்தில் வந்த ஆண், பெண் பயணிகளிடம் ஒரு கிலோ 15 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.