தேசம்

இந்தியாவின் பதக்க கனவை நினைவாக்கிய நீரஜ் சோப்ரா: உலக தடகளப் போட்டியில் வெள்ளி வென்றார்

காமதேனு

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவில் ஓரிகானில் உள்ள யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.
நேற்று முன் தினம் நடந்த ஆண்டுகளுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.38 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் அவர் கட்டாயம் பதக்கம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

2003-ம் ஆண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜின் வெண்கலம் பெற்றதிற்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT