தேசம்

`வயதான என் அம்மாவை கவனிக்க முடியவில்லையே'- வேதனையில் விபத்தில் சிக்கிய மகன், தாயுடன் தற்கொலை

காமதேனு

ஒருவரின் நிலையை எண்ணி, மற்றொருவர் கவலை கொண்டு தாயும், மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்புலெட்சுமி(72) கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சுப்புலெட்சுமியின் மகன் கணேசன்(53) தச்சுதொழிலாளியாக இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மகன் உள்ளனர். கடந்த சிலவாரங்களுக்கு முன்பு கணேசன் சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். இதில் கணேசனின் இடுப்பு எலும்பு முறிந்தது.

இதனால் கணேசனுக்கு தன் தாய் சுப்புலெட்சுமியை உடன் இருந்து பார்க்க முடியவில்லையே என கவலையில் இருந்துவந்தார். அதை தன் தாய் வீட்டிற்குப் போய் புலம்பியிருக்கிறார் கணேசன். அதைச் சொன்னதும், அவரது தாய் சுப்புலெட்சுமியும் தன் நிலையைச் சொல்லி வருந்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தாயும், மகனும் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். சூலக்கரை போலீஸார், தாய், மகன் என இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒருவருக்கொருவர் உடல் நிலையை நினைத்து கவலைப்பட்டு தாய், மகன் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT