தேசம்

8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை: வேண்டுமென்றே நாசம் செய்த எய்ட்ஸ் நோயாளி

காமதேனு

டெல்லியில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞன் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர் என்றும், அந்தச் சிறுமிக்கு வேண்டுமென்றே எச்.ஐ.வி தொற்றைப் பரப்ப முயன்றார் என்றும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு வீட்டுக்கு வாடகைக்குக் குடிவந்தார். அந்த வீட்டுக்கு அருகில் ஒரு பெண் தனது 8 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த ஜூன் 14-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். சிறுமியின் தாயார் வேலை முடிந்து திரும்பியபோது, ​​தனது மகளின் உடலில் கடிபட்ட அடையாளங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்ததாகவும், இதை அறிந்திருந்த நிலையிலும் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பிஹாரைச் சேர்ந்தவர். கணவர் வேறு திருமணம் செய்துகொண்டதால், தனது மகளுடன் தனியாக டெல்லியில் வசித்து வந்தார். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அப்பெண், “என் மகளுக்கும் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர், அடுத்தது என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்று கண்ணீருடன் கூறினார்.

SCROLL FOR NEXT