பெண் மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் தொரப்பாடி பெரியல்லாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மனைவி காயத்ரி. செல்வகுமார் தூத்துக்குடியையும், காயத்ரி கேரளாவையும் பூர்விகமாகக் கொண்டவர்கள். இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வந்தனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு நேரங்களில் பணிக்குச் சென்று திரும்பியதால், அவர்கள் சந்திக்கும் நேரம் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இதனால் காயத்ரி மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளதாக்க கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்குத் திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லை.
இந்நிலையில் பணியின் காரணமாக செல்வகுமார் டெல்லி சென்றுள்ளார். கணவர் இல்லாத நிலையில் காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். டெல்லியிலிருந்த செல்வகுமார் பலமுறை செல்போன் மூலம் காயத்ரியைத் தொடர்பு கொண்ட போது, நீண்ட நேரம் ஆகியும் அவர் போனை எடுக்கவேயில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செல்வகுமார் உடனடியாக விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது காயத்ரி தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த பாகாயம் போலீஸார், காயத்ரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.