தேசம்

ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சவுதி சென்ற குமரி மீனவருக்கு நேர்ந்த துயரம்!

காமதேனு

சவுதியில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற குமரி மீனவர், அங்கு சென்ற 15 நாள்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குறுபனை பகுதியைச் சேர்ந்தவர் சகாய ரோஜஸ்(44) இவர் சவுதி அரேபியாவில் தங்கி ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் சவுதியில் உள்ள ஜெட்டா பகுதியில் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல நேற்று மாலை ஆயுத்தமானார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரோடு தங்கியிருந்த சக மீனவர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சகாய ரோஜஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உயிரிழந்த சகாய ரோஜஸிற்கு, சகாய மெல்பா என்னும் மனைவியும், இருபிள்ளைகளும் உள்ளனர். அண்மையில் சகாய ரோஜஸின் தாய் உயிரிழந்திருந்தார். அதற்காக சொந்த ஊரான குறும்பனைக்கு வந்தவர், கடந்த 15 நாள்களுக்கு முன்புதான் மீண்டும் சவுதி அரேபியாவிற்குச் சென்றார். இந்நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், உயிரிழந்த சகாய ரோஜஸின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவவேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT