கொல்கத்தா காவல் துறை வாகன சோதனை (கோப்பு படம்) 
தேசம்

கொல்கத்தாவில் மே 28 முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு; காவல் துறை அதிரடி

வ.வைரப்பெருமாள்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வரும் 28ம் தேதி முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா காவல் ஆணையர் வினீத்குமார் கோயல் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், 'மாநகரில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் பொது அமைதிக்கு பெரிய அளவிலான இடையூறுகளை ஏற்படுத்தும் என்ற நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. எனவே, வரும் மே 28 முதல் ஜூலை 26 வரை 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் வினீத்குமார் கோயல்

கொல்கத்தா நகரில் அமைதிக்கு இடையூறு ஏற்படுவதை உடனடியாகத் தடுக்கும் வகையில் பேரணிகள், கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி மறுப்பதற்கு போதிய காரணங்கள் உள்ளன. பொது நலனைக் கருத்தில் கொண்டு பொது அமைதிக்கு இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 144 தடை உத்தரவின்படி, 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது சட்டவிரோதமாகும்.

இந்நிலையில் கடந்த மே 22 அன்று கொல்கத்தா காவல்துறை பிறப்பித்த உத்தரவு என கூறி அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'மத்திய கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட்ஷோவை நிறுத்துவதற்கு கொல்கத்தா காவல் துறை 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் திரிணமூல் காங்கிரஸுக்கு தெரியப்படுத்துங்கள்... எந்த தீய தந்திரமும் பாஜகவை தடுக்க முடியாது' என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவரது பதிவுக்கு பதில் அளித்துள்ள கொல்கத்தா காவல் துறை, 'மத்திய கொல்கத்தாவில் இத்தகைய தடை உத்தரவுகள் வழக்கமான அடிப்படையில் பிறப்பிக்கப்படுகின்றன. தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT