‘ 
தேசம்

கொடைக்கானலில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் விற்றால் கடைக்கு சீல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

காமதேனு

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்கும்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் விற்கும் கடைகளை சீல் வைக்கவேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.மேலும், கொடைக்கானலுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச்சாவடிகளை அமைத்து அனைத்து பேருந்துகளையும் சோதனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், சோதனைக்கு பஸ்சை நிறுத்தாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய நிரந்தர படைகளை அமைக்க வேண்டும் எனவும் நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜன.24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT