தேசம்

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பிறந்து 5 நாளான குழந்தை கடத்தல்: அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காமதேனு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 5 நாளான பெண் குழந்தை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரது மனைவி திவ்யபாரதி. இவருக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஜூன் 29- ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திவ்யபாரதி தனது குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்தார். அவருக்கு உதவியாக கணவன் யூனிசும் தங்கியிருந்துள்ளார்.


இன்று அதிகாலை திவ்யபாரதி எழுந்து பார்த்த போது தொட்டிலில் படுத்திருந்த குழந்தையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் தனது கணவரை எழுப்பி தகவல் தெரிவித்தார். அவர்கள் இருவரும் மருத்துவமனை முழுவதும் குழந்தையைத் தேடி அலைந்தனர். ஆனால் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் தூங்கிய நேரத்தில் வார்டுக்குள் புகுந்த யாரோ மர்மநபர்கள் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி போலீஸில் மருத்துவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், குழந்தையின் பெற்றோர், மருத்துவர்கள், செலிலியர்களிடம் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா இல்லாததால் குழந்தையைக் கண்டுபிடிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வெளியே உள்ள சிசிடிவிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்கள் குழந்தையைக் கடத்திய சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT