ராணுவ வீரர்களால் மீட்கப்பட்ட கேரள இளைஞர் பாபு
ராணுவ வீரர்களால் மீட்கப்பட்ட கேரள இளைஞர் பாபு hindu புகைப்படம்
தேசம்

43 மணி நேர போராட்டம்... 3 நாட்களாக மலை இடுக்கில் தவித்த இளைஞர் மீட்பு

காமதேனு

உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த கேரள இளைஞர் பாபுவை 43 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இந்திய ராணுவம் அவரை பத்திரமாக மீட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (28). இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றுள்ளார். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இது குறித்த தகவலை அடுத்து விரைந்து வந்த பாலக்காடு தீயணைப்புப்படை வீரர்கள் தீவிரமாக முயற்சி செய்தும் பாபுவை மீட்க முடியவில்லை. இதையடுத்து கொச்சி கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு நடைபெற்ற மீட்பு பணியும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால், இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.

முதற்கட்டமாக மலை இடுக்கில் 48 மணி நேரமாக சிக்கியிருந்த பாபுவை நெருங்கிய ராணுவ வீரர்கள் அவருக்கு தெம்பு அளிக்கும் வகையில் உணவு, தண்ணீர் வழங்கினர். அவரை கீழே கொண்டும் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த உதகமண்டலத்தில் உள்ள வெலிங்டன் படை பிரிவினரும், பெங்களூருவில் இருந்து மலையேற்றம் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களும் இளைஞர் பாபுவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 43 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாபுவை இந்திய ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மலையில் கயிறு கட்டி இறக்கி பாபு மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட இளைஞர் சோர்வுடன் இருந்தாலும் நல்ல உடல்நலத்துடனி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இளைஞர் பாபு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

SCROLL FOR NEXT