தேசம்

தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்த சிறுமி: 4 நாட்களுக்கு பிறகு நடந்த துயரம்!

காமதேனு

காஞ்சிபுரத்தில் தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்த ஆறு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது ஆறு வயது மகள் பிரதியா அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெயைத் தண்ணீர் என நினைத்து சிறுமி குடித்துள்ளார். மண்ணெண்ணெயைக் குடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து குடும்பத்தினர் அவரிடம் விசாரித்தபோது, அவர் தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாகச் சிறுமி பிரதியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணெயைக் குடித்த சிறுமி பலியான சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT