பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்த காரணத்தால் தீவைத்து எரிக்கப்பட்ட 23 வயது பெண், தீக்காயங்களுடன் ராஞ்சி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கை சேர்ந்த பெண்ணின் வீட்டில் ஜனவரி 7-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்ததற்காக, நான்கு நபர்கள் அவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் அவரது உறவினர்கள்.
சுமார் 70 சதவீத தீக்காயங்களுடன் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் அந்த பெண் சிகிச்சை பெற்று வந்தார். அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார் என்பதை
ஹசாரிபாக் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே உறுதிப்படுத்தினார். மேலும், இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க ஹசாரிபாக் போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளனர். எனினும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இது குறித்துப் பேசிய எஸ்.பி, “எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவிர, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். ஏனெனில் அந்த பெண்ணும், அவரது கணவரும் அளித்த வாக்குமூலங்களில் பொருத்தமில்லாமல் உள்ளது. உதவிக்காக கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் தன்னை காப்பாற்றியதாக அந்த பெண் கூறினார். அதே நேரத்தில் தான் காப்பாற்றியதாக அப்பெண்ணின் கணவர் கூறினார்" என்று தெரிவித்துள்ளார்
உயிரிழந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், பலியானவர் அவரது நான்காவது மனைவி என்றும் போலீசார் தெரிவித்தனர்.
குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பேரில் ஒருவர் பெண், அவர் பாதிக்கப்பட்டப் பெண்ணின் மைத்துனி என்பதால், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு குறித்தும் போலீசார் சந்தேகம் எழுப்பினர். மேலும், மைத்துனியின் மகன்களும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.