திருமண ஆசைக்காட்டி மோசடி
திருமண ஆசைக்காட்டி மோசடி  பலமுறை காதலியிடம் உடலுறவு; திருமண ஆசைக்காட்டி மோசடி: சிறை நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள்
தேசம்

பலமுறை காதலியிடம் உடலுறவு; திருமண ஆசைக்காட்டி மோசடி: சிறை நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள்

காமதேனு

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை மோசடி செய்த சிறை நன்னடத்தை அதிகாரி மற்றும் அவரது பெற்றோருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குரூப் 1 தேர்விற்கான பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் திருச்சியை சேர்ந்த சத்தியமூர்த்தியும், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பெண்ணும் நண்பர்களாக பழகத் தொடங்கினர். நாளடைவில் அது காதலானது. இருவரும் காதலித்துவந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறிய சத்தியமூர்த்தி, பலமுறை காதலியிடம் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற சத்தியமூர்த்தி சைதாப்பேட்டை சிறை நன்னடத்தை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஆனால் அதன்பின்னர்  தங்கையின் திருமணம், பெற்றோர் சம்மதமின்மை போன்ற காரணங்களை கூறி காதலித்துவந்த பெண்ணை திருமணம் செய்வதை தவிர்த்து வந்துள்ளார். பின்னர் உறவுக்கார பெண்ணுடன் நிச்சயமாகிவிட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், சத்தியமூர்த்தியின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தியின் பெற்றோர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சாதிப் பெயரை சொல்லி அந்த பெண்ணையும், அவரது தாயையும் திட்டியதோடு, மகனிடம் பழகியதற்காக பணம் கொடுப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சத்தியமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை குமரன்நகர்  காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி இந்த வழக்கை விசாரித்தார்.  அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி வாதிட்டார்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் நீதிபதி இன்று அளித்த தீர்ப்பில்,  வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறை நன்னடத்தை அதிகாரி சத்தியமூர்த்தி, அவரது தந்தை ரெங்கு, தாய் சாரதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். அத்துடன்  சத்தியமூர்த்திக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதமும், பெற்றோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT