தேசம்

கோயில் வளாகத்திற்குள் தனிநபர்கள் யாகம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கி.மகாராஜன்

தமிழக கோயில்களில் உள் பிரகாரத்தில் தனி நபர் யாகங்கள், சிறப்பு யாகங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 30-ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம் ஆனால், இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி அளிக்கவில்லை. எனவே, திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், " திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருப்பதி கோயிலில் உள்ளது போன்ற கட்டுபாட்டுகளைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் கோயில் வளாகத்திற்குள் யாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களில் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். இந்த வழக்கு விசாரணை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT