தேசம்

5 ஆயிரம் கார்களைத் திருடிய இந்தியாவின் மெகா திருடன் கைது: 6 துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்!

காமதேனு

இந்தியாவில் 5 ஆயிரம் கார்களைத் திருடிய மெகா திருடனை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து 6 துப்பாக்கிகள், தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லி கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் சவுகான்(52). ஆட்டோ தொழிலாளியான அவர் 1995-ம் ஆண்டு முதல் கார்களைத் திருடத் தொடங்கினார். பொழுது போக்கிற்கு கார்களைத் திருட ஆரம்பித்த அனில், பின் அதையே தொழிலாக மாற்றியுள்ளார். குறிப்பாக மாருதி 800 கார்களையே அதிகமாக அவர் திருடி விற்றுள்ளார். அப்படி திருடும் போது கார் ஓட்டுநர்களையும் அவர் கொலை செய்துள்ளார்.

இப்படி திருடிய கார்களை நேபாளம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விற்று வந்த பணத்தைக் கொண்டு டெல்லி, மும்பையில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். இந்த நிலையில், அசாமிற்கு இடம் பெயர்ந்துள்ளார் அனில். இவருக்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. பல முறை போலீஸாரால் கைது செய்யப்பட்ட அனில் சவுகான் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அனில், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்ததில் இருந்து ஆயுதங்களைக் கடத்தி வடகிழக்கு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட மாநிலங்களில் விற்றுள்ளார். இவர் மீது 180 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசபந்து குப்தா சாலையில் மத்திய டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் அனிலை இன்று கைது செய்தனர். இந்தியாவின் மிக பெரிய கார் திருடனான அனில் 5 ஆயிரம் கார்களைத் திருடியதாக போலீஸார் கூறுகின்றனர். அனில் சவுகானுக்கு 3 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர்.

டெல்லியை விட்டு அசாமிற்கு இடம் பெயர்ந்த பிறகு அரசு ஒப்பந்ததாரராகவும் மாறியுள்ளார். அவரிடமிருந்து 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களை போலீஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

SCROLL FOR NEXT