தமிழகத்தில் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வுக்கான தேதிகள் மாற்றப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 75 ஆண்டுகளாக நடைபெறும் தட்டச்சு தேர்வுகளை மாற்றி புதிய நடைமுறையை அரசு அறிவித்தது. அந்த புதிய நடைமுறையின் படி, இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள்-1 ஸ்டேட்மென்ட், லெட்டர் தேர்வாகவும், தாள்- 2 ஸ்பீடு தேர்வாக நடைபெற அறிவிக்கப்பட்டது.
அதற்கு எதிராக உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தட்டச்சு தேர்வை 2 வார காலங்களுக்கு ஒத்திவைக்குமாறு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டது. பின்பு அவ்வழக்கில் தட்டச்சு தேர்வுகளை புதிய நடைமுறையில் (இரண்டாம் தாள் முதலாவதாகவும், முதல் தாள் இரண்டாவதாகவும்) நடத்த இடைக்கால உத்தரவு அக்.20-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, அதன் அடிப்படையில் தட்டச்சு தேர்வுக்கான புதிய தேதி 12.11.2022 & 13.11.2022 ஆக மாற்றி அமைக்கப்பட்ட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தட்டச்சு தேர்வு ஹால் டிக்கெட்டுகளை விண்ணப்பதாரர்கள் https://tndtegteonline.in என்ற இணைய முகவரி மூலம் 1 நவம்பர் 2022 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது.