நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி. கல்லுப்பட்டி பி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(44). இவரது மனைவி முருகாம்பாள்(40). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். கிருஷ்ணன், தனியார் மில்லில் காவலாளியாக பணியாற்றி வந்தார். முருகாம்பாளும் தனியார் மில்லில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி மனைவி முருகாம்பாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த மனைவி முருகாம்பாளின் தலையில், கிருஷ்ணன், கம்பியால் தாக்கி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த டி. கல்லுப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகாம்பாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிருஷ்ணனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.