‘கொலை வழக்குகளை விசாரிக்க காவல்துறையில் புதிதாக தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அரியமங்கலத்தை சேரந்தவர்கள் சதீஷ்குமார், சங்கர். இவர்களுக்கு கொலை வழக்கில் திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 2 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில், கொலை வழக்குகளை சட்டம்- ஒழுங்கு போலீஸாரே விசாரிக்கின்றனர். பணிப்பளு காரணமாக விசாரணையை தொய்வு இல்லாமல் மேற்கொள்ள சட்டம் -ஒழுங்கு போலீஸாரால் முடியவில்லை. இதனால் தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு தொடங்க காவல்துறைக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. இது தொடர்பாக தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். பின்னர், விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.