தேசம்

தமிழகத்தில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு அதிகம்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காமதேனு

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதால் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அணைகளுக்கும், ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அத்துடன் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மாநில பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள், சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில் மீட்பு பணியில் ஈடுபட போலீஸ் நீச்சல் வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் 30 பேர் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நவ.16-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அந்தமான் அருகே நவ. 16-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT