தேசம்

அரசு பேருந்தை பின்னோக்கி எடுத்த ஓட்டுநர்; சக்கரத்தில் சிக்கி பலியான காவலாளி: கைதான திமுக நிர்வாகி

காமதேனு

குன்றத்தூர் பணிமனையில் பேருந்தை பின் நோக்கி இயக்கிய போது பேருந்து மோதி காவலாளி உயிரிழந்தார். இது தொடர்பாக திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குன்றத்தூர், புது வட்டாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(46). இவர் குன்றத்தூர் அரசு பணிமனையில் பேருந்து ஒட்டுநராக வேலை செய்து வருகிறார். மேலும் திமுகவில் தொமுச மத்திய சென்னை நிர்வாகியாகவும் உள்ளார். இன்று காலை பாலசுப்புரமணியன் குன்றத்தூரில் இருந்து பிராட்வே செல்லும் 88k பேருந்தில் டீசல் நிரப்பி விட்டு பேருந்தை பின் நோக்கி இயக்கியுள்ளார். அப்போது அங்கு காவலாளியாக பணியாற்றி வந்த குன்றத்துரை சேர்ந்த வேலுச்சாமி(65) என்பவர் மீது பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனே குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்த வேலுச்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, காவலாளி வேலுச்சாமி பணியில் ஈடுபட்டிருந்ததை கவனிக்காமல் பேருந்தை பின்நோக்கி இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. மேலும் குன்றத்தூர் பணிமனையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT