தேசம்

நள்ளிரவில் அறுக்கப்பட்ட தாத்தாவின் தலை; கொடூரமாக கொன்ற பேரன்: ஒரு ஏக்கர் சொத்துக்காக நடந்த பயங்கரம்

காமதேனு

சொத்துப் பிரச்சினை காரணமாக பேரனே தாத்தாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் மருதை(80)-முத்தம்மாள்ன் (75) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும், முருகேசன் உள்பட மூன்று மகன்களும் உள்ளனர். மருதைக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தொடர்பாக இவர்கள் குடும்பத்திற்குள் ஏற்கெனவே சொத்துப் பிரச்சினை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முருகேசனின் மூத்த மகன் சக்திவேல்(27) சொத்து தொடர்பாக நேற்று நள்ளிரவில் மருதையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருதையின் தலையை தனியாக துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார்.

மருதை கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிகாலையில் எரியோடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் வேடசந்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் துர்கா தேவி ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்த வேடசந்தூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய சக்திவேலையும் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT