உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜன.26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்.2 காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்த கூட்டங்களில் ஆலோசிக்கப்படும். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி அந்த நான்கு நாட்களோடு கூடுதலாக மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவ.1 - உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி மார்ச் 22 உலக தண்ணீர் தினமான இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை காலை 11 மணி அளவில் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.