தேசம்

அவசரமாக வெளியேற முயன்ற கடத்தல்காரர்கள்: சென்னை ஏர்போர்ட்டில் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய சுங்கத்துறை

காமதேனு

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.08 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் மூன்று கிலோ அளவிற்கு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து சென்னை வரும் 'இண்டிகோ' விமானத்தில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாகச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, சந்தேகப்படும் படியாக விமான நிலையத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேற முயன்ற இருவரைச் சுங்க அதிகாரிகள் மடக்கினார்கள்.

அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.08 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக சுங்கத்துறை புலனாய்வு அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது போன்று கடந்த 13-ம் தேதியும் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.61.75 லட்சம் மதிப்புள்ள 1.33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உள்ளாடையில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT